Showing posts with label FeTNA. Show all posts
Showing posts with label FeTNA. Show all posts

Sunday, December 21, 2014

பேரவையின் தமிழ் விழா ஒரு அறிமுகம்



வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை என்பது  வட அமெரிக்காவில் உள்ள பற்பல தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகும்.  ஒவ்வொரு ஆண்டும் இந்த பேரவையின் ஆண்டு விழாவை கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு தமிழ்ச் சங்கம் பொறுப்பேற்று தங்களது நகரத்தில் நடத்தி வருகிறது. உலகெங்கிலுமிருந்து இயல், இசை, நாடகம் மற்றும் சினிமா துறையை சார்ந்த பல்வேறு கலைஞர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு முத்தமிழில் இனிமையான விருந்து படைப்பர். வட அமெரிக்காவின் பல பகுதியிலிருந்தும் தமிழர்கள்  இந்த நிகழ்ச்சியை கண்டு களிப்பதோடு , தமிழ்ச் சொந்தங்களோடு உறவாடவும் ஒரு வாய்ப்பாகவும் கருதி தொடர்ந்து வரும் வண்ணம் உள்ளனர். பேரவையின் வரலாற்றில் முதல் முதலாக பேரவையின்  ஆண்டு  விழாவை நமது வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம், தமிழ்நாடு அறகட்டளையுடன் சேர்ந்து மேற்கு கடற்கரையோரம்  சான் ஓசே நகரில்  2015ம் ஆண்டு ஜூலை மாதம் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை   நடத்த முடிவு செய்து அதற்கான பணிகள் தன்னார்வ தொண்டர்களால் முன்னெடுக்கப்பட்டு நடந்து வருகிறது.

தமிழ்நாடு அறகட்டளை  (TNF -Tamilnadu Foundation) மற்றும்  அமெரிக்க தமிழர் மருத்துவர் அமைப்பு (ATMA - American Tamil medical Association) ஆகியோரும் இவ்விழாவினை கலந்து சிறப்பிக்க  முன்வந்துள்ளனர்.இந்த விழாவில் கிடைக்கும் லாபத்தின் ஒரு முக்கிய பகுதி நமது வளைகுடா பகுதி தமிழ் மன்றத்தின் தமிழ்ப் பண்பாட்டு மையம் தொடங்க  பயன்பட போகிறது என்பதும் குறிப்பிட தக்கது.

விழாவின்  அமைப்பு

இரண்டு நாட்கள் முழுமையாகவும் முதல் நாள் மற்றும் கடைசி நாள் பகுதி பொழுதிலும் இந்த விழா நடைபெறும். ஜூலை மாதம் 2ம் தேதி மாலை  உலகெங்கிலுமிருந்து வந்திருக்கும்  சிறப்பு விருந்தினருடன் இரவு சிறப்பு விருந்து  மற்றும் அளவளாவல் நடைபெறும். இந்த விருந்தில் விழாவிற்கு நன்கொடை அளித்த அனைவரும் இலவசமாக  கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ள பிறர் சிறப்பு கட்டணம் கொடுத்து அனுமதி சீட்டு வாங்கி கொள்ளலாம். ஜூலை மாதம் 3 மற்றும் 4 தேதிகளில் சான் ஒசே நகரிலுள்ள சிவிக் அரங்கில் காலை முதல்  இரவு வரை  முழுமையாக முதன்மை மற்றும் இணை அரங்குகளில் அனைத்து தரப்பு மக்களின் ரசனைகளையும் நிறைவுச் செய்யும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். ஜூலை 5 ம் தேதி சிறப்பு விருந்தினர்களுடன் இலக்கியச் சந்திப்பு நடைபெறும். இதில் அனைவரும் கலந்து கொள்ளலாம். தமிழகத்திலிருந்து வந்திருந்த பெரும்பான்மையான கலஞர்களும், அறிஞர்களும் தமிழுக்காக இலக்கியத் தரம் மற்றும் மனதைக் கவரும் நிகழ்ச்சிகளை கொண்டு நடைபெறும் இது போன்ற நிகழ்ச்சி உலகில், ஏன் தமிழத்தில் கூட நடைபெறுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது,

விழாவின் சிறப்பு

பொதுவாக அமெரிக்காவில் நடக்கும் தமிழ் நிகழ்ச்சிகள் ஒரு சில மணி நேரங்கள் நடந்து   இலக்கியம், இசை, சினிமா என எதாவது ஒரு விருப்பத்தை நிறைவுச் செய்வதாகவே இருக்கும். அவ்விழாவிற்கான சிறப்பு விருந்தினரும் ஒரு சிலரே இருப்பர். குடும்பத்தோடு விழாவிற்கு செல்லும் போது அந்த நிகழ்ச்சியும் குடும்பத்தில் ஒரு சிலரின் விருப்பத்தை மட்டும்  நிறைவுச் செய்வதால் அந்த நிகழ்ச்சியில் விருப்பம் இல்லாதவர்கள் மற்றவர்களின் விருப்பத்திற்காகச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். ஆனால் பேரவை  விழா என்பது தமிழ் இலக்கியம், தமிழ் இசை,  கர்நாடக (தமிழ்) இசை, ஆன்மீகம்,தொல் தமிழ் இசை (பறை போன்றவை), பரத நாட்டியம், தொல் தமிழ் கலைகள், நவீன நாடகம் மற்றும் தொல் தமிழ் நாடகம் (கூத்து,நாட்டிய நாடகம் போன்றவை), தமிழ் ஆர்வலர் மற்றும் உணர்வாளர்   சார்ந்த நிகழ்ச்சி, சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான நிகழ்ச்சி, தொழில் முனைவோர்களுக்கான நிகழ்ச்சி  , திரைப்பட ஆர்வலர்களுக்கான நிகழ்ச்சி என அனைத்து தரப்பு மக்களின் விருப்பத்தையும் பூர்த்தி செய்யும் விதத்தில் சுமார் 80 மணி நேரத்திற்கும் மேலான நிகழ்ச்சி நடைபெறும். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் முக்கிய மற்றும் பல இணை அரங்குகளில்  ஒரே நேரத்தில் இணையாக நடந்து கொண்டிருப்பதால் உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சியை தேர்வு செய்து  விருப்பமான நிகழ்ச்சியை மட்டும் கண்டுகளிக்களாம். பெரும்பான்மையான நிகழ்ச்சிகள் ஒரே அரங்கில் வெவ்வேறு அறைகளில் நடைபெறுவதால் ஒரே குடும்பம் அல்லது குழுவை சேர்ந்தவரக்ள் தங்களுக்கு பிடித்து அரங்குகளில் என்று நிகழ்ச்சியை பார்த்து விட்டு பிறகு எளிதில் ஒன்று கூடி விடலாம்.தமிழகம் மற்றும் உலகெங்கிலிருந்து தமிழ் இலக்கியம்  மற்றும் திரைபடத்துறை  சார்த்த பல்வேறு பிரபலங்கள்  மிக பெரிய அளவில் வந்து கலந்து கொள்வார்கள்.

கடந்த விழாக்களில் கலந்து கொண்ட சிலர்: நடிகர்கள் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், நாசர், விக்ரம், கார்த்தி, சிவகுமார், மனோரமா; இசையமைப்பாளர்கள் இளையராஜா, பரத்வாஜ், பாடகர்கள், TM சௌந்திரராஜன், சுசீலா, வாணி ஜெயராம், SP பாலசுப்ரமணியம், சங்கர் மகாதேவன், கிரிஷ், சின்மன்யி போன்ற பலர்;  பாடலாசிரியர்கள் தாமரை, குட்டிரேவதி, வைரமுத்து, அறிஞர் பெருமக்கள் பிரபஞ்சன், இளங்குமரனார் அய்யா; 2003 விழாவைத் துவக்கி வைத்தவர் இந்திய குடியரசு தலைவர் மேதகு முனைவர் அப்துல் கலாம் அவர்கள். அரசியல்வாதிகளான அய்யா நல்லகண்ணு, மகேந்திரன், இயக்குநர்கள் பாரதிராஜா, தங்கர்பச்சான், சீமான், மேலும் பலர் பேரவை விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

அது மட்டுமன்றி புலம் பெயர்ந்து அமெரிக்காவில் குடியேறி அறிவியல்,தொழில் நுட்பம், தொழில் மற்றும்  கலை துறைகளில் சாதனை படைத்த தமிழர்களை சிறப்பிப்பதோடு அவர்கள் மூலம் இளம் தலைமுறையினருக்கு சாதனைகள் செய்ய ஊக்க படுத்தவும் படுகிறது. உலகில் பெரும்பான்மையான  மாபெரும் தொழில் நுட்ப நிறுவனங்களை விதையாக இடபட்டு ஆலமரமாக வளர்ந்திருக்கும் சிலிக்கன் பள்ளத்தாக்கில் நடைபெறும் இந்த விழாவில் தொழில் முனைவோர்களுக்காவும் , தொடக்க நிலை தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்களுக்கும், உயர்நிலை பள்ளி மற்றும் கல்லூரி இளைஞர்களுக்கு தொழில் தொடங்க ஊக்குவிப்பதோடு அதற்கு தேவையான தகவல்களை தரவும் , முன்னனி தொழில் நிறுவனங்களின் உயரதிகாரிகள் ,ஸ்டான்போர்டு போன்ற பலகலை கழக பேராசிரியர்கள், முதலீட்டாளர்கள், வெற்றிகரமாக தொழில் தொடங்கி நடத்தி வருபவரகள்  என அனைத்து தரப்பினர்களையும் கொண்டு ஒரு நாள் முழுக்க நிகழ்ச்சி நடத்துவதோடு Busines Networking செய்யவும் திட்டமிடபட்டுள்ளது. நீங்கள் தொழில் முனைவோராகவோ  , துவக்க நிலை தொழில் தொடங்குவோராகவோ, அதை விட முக்கியமாக இடைநிலை/உயர் பள்ளி அல்லது பல்கலைகழகம் படிக்கும் குழந்தைகளின் பெற்றோராக இருந்தால், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு  நிச்சயமாக இந்த நிகழ்ச்சியில்   கலந்து கொள்ளவேண்டும்.

பொதுவாக வளைகுடா பகுதியில் ஒருசில மணிநேரம்  நடைபெறும் மெல்லிசை நிகழ்ச்சியை காண மிக பெரிய அளவில் பொருள் செலவு செய்து செல்கிறோம். இந்த பேரவை விழாவிலோ 80 மணி நேரத்துக்கும் அதிகமான நிகழ்ச்சிகளை கொண்டு அனைத்து தரப்பு மக்களையும் திருப்தி செய்வதோடு மட்டும்  அல்லாமல் ஜூலை மாதம் 4ம் தேதி மாலையிலிருந்து நள்ளிரவு வரை தமிழகத்திலிருந்து வரும் பிரபலமான பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களை கொண்டு மாபெரும் மெல்லிசை விருந்தும் படைக்க பட உள்ளது. விழாவிற்கான டிக்கெட்டின் விலையிலேயே இந்த மெல்லிசை நிகழ்ச்சிக்கான அனுமதியும் இலவசம். இத்தனை சிறப்பான நிகழ்ச்சிகளையும் குறைந்த விலையிலேயே காண உடனே ஜூலை மாதம்  3 மற்றும் 4 ம் தேதியை உங்கள் காலண்டரில் இப்போதே குறித்து வைத்து கொள்ளுங்கள்.

இவ்விழாவிற்கான டிக்கெட்டுகளை வாங்க, இந்த விழா பற்றிய குறிப்புகள் மற்றும் கலந்து கொள்ளவுள்ள பிரபலங்கள் பெயர்களை அறியவும் அவ்வப்போது www.fetna2015.org  என்ற வலை தளத்துக்கும் என்ற  www.fetna2015.blogspot.com வலைமனையிற்கும் அடிக்கடி வருகை தாருங்கள்.

இவ்வளவு பெரிய விழாவை நடத்துவதற்கு  டிக்கெட் வாங்குவதற்கு பதில் சிறிது அதிகம் பணம் கொடுத்து நன்கொடையாளராக இருந்து விழாவை வெற்றிகரமாக நடத்த  உதவி செய்வதோடு நன்கொடையாளர்களுக்கான சிறப்பு  சலுகையான பிரபலங்களோடான இரவு விருந்து போன்ற சலுகைகளையும் அனுபவிக்க தவறாதீர்கள்.

இந்த ஒரு அரிய வாய்ப்பு இது வரை மேற்கு கடற்கரையில் வாழும் தமிழர்களுக்கு கிட்டவில்லை. எனவே இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, உங்கள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் இணைந்து இவ்விழாவை வெற்றியடைய அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.

Sunday, June 10, 2012

அமெரிக்க நாட்டுப்பண் உயிர்த்த இடத்தில் திருவிழா!!


அமெரிக்க நாட்டுப்பண் உயிர்த்த இடத்தில் திருவிழா

இலக்கியவாதி கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன்
தமிழறிஞர் மறைமலை இலக்குவனார்
எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன்
எழுபது கவனகர் முனைவர் கலை.செழியன்
வாழும் கலைப்பயிற்சி இரவிசங்கர் அவர்கள்
பாடகி K.S.சித்ரா அவர்களின் மெல்லிசை நிகழ்ச்சி
ஐங்கரன் இசைக்குழு
பலகுரல் மன்னன் முகேசு
வித்யா, வந்தனா சகோதரிகளின் பண்ணிசை
பகடிக் கலைஞன் மதுரை முத்து
பல்சுவைக் கலைஞர் சிவகார்த்திகேயன்
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி
வீரத்தாய் வேலுநாச்சியார் நாட்டிய நாடகம்
தமிழன் - தமிழச்சி, நாடளாவிய வாகைசூடிக்கான போட்டி
முனைவர் மு.வ அவர்களின் நூற்றாண்டுச் சிறப்புரை
மு.வ அவர்களின் வழிகாட்டுதலில் அமெரிக்கத் தமிழர்
தமிழ் இலக்கியக் கூட்டம்
வலைஞர் கூடல்
தொடர் மருத்துவக் கல்வி
இலக்கிய விநாடி வினா
தொழில் முனைவோர் கூட்டம்
யோகாசனப் பாசறை
தமிழ்த்தேனீ
மாபெரும் தமிழிசை நிகழ்ச்சி
பல்கலைக்கழக முன்னாள் மாணவர் கூட்டங்கள்
பாட்டரங்கம்
பட்டி மண்டபம்
உரைவீச்சு
வெள்ளி விழா மலர் வெளியீடு
பேரவை இதழான அருவி ஆசிரியர் குழுவின் சொல்வீச்சு
தமிழ்ச்சங்கங்களின் கலை நிகழ்ச்சிகள்
இன்னும் பல நிகழ்ச்சிகள்


Register early before it gets full. It happened in FeTNA 2009! Register Now!!

Thursday, March 31, 2011

பேரவை விழா 2011 சிறப்பு விருந்தினர்கள் - நடிகர் நாசர்

நாசர், செங்கற்பட்டுக்கருகில் ஒரு கிராமத்தில் நகை மெருகூட்டும் தொழிலாளரின் மூத்த மகனாகப் பிறந்தவர். இளமையிலிருந்தே நடிப்பில் ஆர்வம் செலுத்தத் தூண்டியது தந்தையின் உந்துதல். மருத்துவராக்க வேண்டுமென்பது தந்தையின் விருப்பம். ஆனால் பி.யு.சியில் தோல்வி. குடும்பச் சூழல் ஏதேனும் ஒரு வேலையில் சேரத் தூண்ட விமானப்படையில் சேர்ந்தார். அது தந்தைக்குப் பிடிக்கவில்லை. நடிக்கப் பயில் என்ற தந்தை, நாசர் நடிப்புக் கல்லூரியில் சேர்வதற்குப் பெரும் கஷ்டத்துடன் உதவினார். நாசர் நடிப்பை ஒரு பாடமாகப் படிக்கத் தொடங்குகிறார். ஓராண்டின் பின் அந்தக் கல்லூரி மூடப்பட, வருமானத்துக்காக தாஜ் கோரமண்டல் விடுதியில் சிப்பந்தியாகிறார். அங்கிருந்த மூன்றாண்டுகளில் இடையிடையே நாடகக் குழுக்களோடு பரிச்சயமும், சில மேடை நாடகங்களையும், சில சிறு பாத்திரங்களையும் ஏற்று திரையிலும், தொலைக்காட்சியிலும் நடிக்கிறார். நடிப்பின் மேலிருந்த தீவிர ஈடுபாட்டால் வேலையை விட்டுவிட்டுத் தமிழக அரசுத் திரைப்படக் கல்லூரியில் சேர்கிறார். வகுப்பறை கற்றுத் தந்ததை விட அதிகமாக நண்பர் குழாத்துடன் சேர்ந்து வீதிகளையும், வெளியையும் மேடைகளாக்கி அவற்றிலேயே நடிக்கப் பழகுகிறார்கள் நண்பர்கள். நாடகத்துக்கும், திரைக்குமிடையே இருக்கும் இடைவெளி தமிழ்த் திரையுலகில் அதிகம். இந்த இடைவெளியை முதலில் அறிதல் கடினம், நோய்நாடி என்பது போல். அந்த இடைவெளியை நிரப்புதல் நோயைக் குணமாக்கல் போலத்தான். நாடக உலகில் பேரவாக் கொண்டிருந்த நாசருக்குத் வெள்ளித்திரையோடு இயங்குவதையே ஒரு கலையாகப் பயிலவேண்டியிருந்தது. வாய்ப்புக்களைத் தேடி இயக்குனர்களின் வீட்டுவாசல்களில் தவமிருந்தார் சில காலம். பிறகு வாய்ப்பு நம்மைத் தேடித்தான் வரவேண்டும் என்ற படிப்பினையை ஒரு உறவினர் கொடுக்க, வாய்ப்புக்குத் தகுதியுள்ளவராய் மேலும் ஆக்கிக் கொள்ளும் உரையாடல்களிலும் குழுச் செயற்பாடுகளிலும் ஈடுபடுகிறார். கல்யாண அகதிகள் என்ற படத்தில் வாய்ப்பு கிடைக்கிறது. அதன் பிறகு நாயகன் ஒரு திருப்புமுனை. இதற்கிடையில் பல வெற்றி தோல்விகளைப் படங்களின் வாயிலாகச் சந்திக்கிறார். அதிர்ஷ்டம் என்பதை விட தான் கற்ற கல்வியே தன் வாழ்வை வடிவமைப்பதாகச் சொல்கிறார். இந்தக் காலகட்டத்தில் இவரது போராட்டங்களையும், மன உளைச்சலையும், அவற்றை எதிர்கொண்டு ஆராய்ந்து களையும் நெஞ்சுறுதியும் இளைஞர்களுக்கு வேண்டும். இவர் வெல்லும் போது ஊழையும் உப்பக்கம் காண்பர் உழைவின்றித் தாளாது உஞற்றுபவர் என்ற வள்ளுவம் நினைவுக்கு வரும். இப்போராட்டத்தினிடையே தனது வாழ்க்கைத் துணையைக் காண்கிறார். கமீலா ஒரு குடும்ப நல மனோவியலாளர். இவரது தொழிலில் ஈடுபடும் நேரத்தையும் வாய்ப்பையும் தன்னால் வழங்க முடியவில்லையே என்ற ஏக்கம் நாசருக்கு உண்டு. ஏனெனில் நடிப்பைத் தவிர ஏனைய நாசரின் பெரும் வேலைப் பாரங்களைச் சமாளிப்பவர் கமீலாவே.

நாடகங்களிலிருக்கும் உயிர்ப்புத் தன்மையினைத் திரைக்குக் கொண்டு வருவதில் அவர் காட்டிய முனைப்பும், நாசரிடம் இருந்த படைப்பூக்கமும் அவரை ஒரு இயக்குநராகப் பரிணமிக்க வைத்திருந்தது. தேவதை, அவதாரம், பாப்கார்ன், மாயன் போன்ற படங்களை இயக்குகிறார். சிறந்த படங்கள் என்று பலரால் பாராட்டப்பட்டபோதிலும் பொருளாதார ரீதியில் அவருக்கு இப்படங்கள் ஒரு பின்னடைவையே தந்தன. இப்பின்னடைவிலிருந்தும், அதனைச் சூழ்ந்திருந்த உணர்வுப் போராட்டங்களிலிருந்தும் அவர் விடுபடுவதற்குக் கமீலாவுடன் சேர்ந்து மீண்ட விதம் பாராட்டுக்குரியது. குடும்பங்களுக்குள் நிகழும் தொழில் சார்ந்த இத்தகைய பிணக்குகள் தாங்கவியலாத் துயரத்தையும், சில நேரங்களில் பெரும் விரிசல்களையும் ஏற்படுத்துவதைப் பார்க்கிறோம். இச்சூழலில் நாசர்-கமீலா இணையர் புரிந்துணர்வுடன் செயலாற்றிய விதம் இளந்தம்பதியர்க்கு ஒரு மணவாழ்க்கைப் பாடம். இவர்களுக்கு மூன்று மகன்கள். சென்னையில் வசிக்கிறார்கள். நாசரின் வீட்டில் அவராலேயே வடிவமைக்கப்பட்ட கலைப்பொருட்கள் நிறைய. சென்ற இடங்களில் வாங்கி வைத்தவையும், அவற்றைக் கொண்டு உருவாக்கியவையுமாக இவ்வீடு ஒரு கலைக்கூடமாக இருக்க வேண்டுமென்ற கற்பனை எழுகிறது.

நாசர் தன்னுடைய கலைத் தேடலின்போது கிடைத்த ஆதரவை அல்லது கிடைக்காதுபோன ஆதரவைத் தன்னுடைய இளைய சகாக்களுக்கு வழங்கி அவர்கள் மேலேறி வர உதவுகிறார். இவரால் அறிமுகம் செய்யப்பட்ட பசுபதி, சண்முகராஜன் போன்ற சிறந்த நாடக நடிகர்கள் இன்று திரையிலும் மிளிர்வதற்கு நாசர் தன்னாலான உதவிகளைச் செய்கிறார். தங்களது அடவு நிறுவனத்தின் மூலம் நாசர்-கமீலா பல கலைஞர்களுக்கு நாடகப் பயிற்சியளித்து உதவிவருகிறார்கள். அடவு நிறுவனம் நலிந்த கலைகளுக்கும், நலிந்த கலைஞர்களுக்கும் முன்னுரிமை அளித்து இக்கலைகளும் கலைஞர்களும் மேம்பட உதவுகின்றது.

நேர்காணல் என்ற பத்திரிகை ஒன்று வெளிவருகிறது. அதில் நாசரின் விரிவான (42 பக்கங்கள்!) நேர்காணலும், அவரைப் பற்றி அவரை அறிந்த இதர கலைஞர்கள், நண்பர்களின் பகிர்வுகளோடு வந்திருக்கிறது. நேர்காணல் என்ற பெயர்களில் ஒன்றரைப் பக்கத்தில் வருகின்றவை ஒருவரின் ஒரு பொருளைப் பற்றிய கருத்தையறிய உதவுகின்றன. ஆனால் இதனைப் போன்ற விரிவான நேர்காணலே ஒரு மனிதரின் பலவிதமான முகங்களைக் காட்டி அவரிடமிருந்து கற்பதற்கான தெளிந்த சூழலை ஒரு வாசகருக்கு ஏற்படுத்தித் தருகிறது. இத்தகைய நேர்காணலைப் படித்தபிறகு, இதுவரை திரையில் கண்டுவந்த நாசர் என்ற நடிகனின் பின்னாலிருக்கும் விடாமுயற்சியுள்ள மனிதனும், தாகங்கொண்ட ஒரு மாணவனும் தென்படுகிறார்கள். விரிகின்ற காட்சிகளால் அதிசயப்படுவதும் கற்றுக்கொள்வதும்தானே வாழ்வின் சுவையான தருணங்கள்!

இத்தகைய அரிய கலைஞர் பேரவை விழாவுக்கு வருகிறார். இவரோடு நிச்சயம் பேசுவதற்கும், கேட்டுத் தெளிவு பெறுவதற்கும் உங்களிடம் கேள்விகள் இருக்கலாம். பெரும்பாலான நட்சத்திரக் கேள்வி நேரங்கள் அர்த்தமில்லாத, நகைச்சுவை என்ற பெயரால் அபத்தமான கேள்விகளாலும் நிறைந்துவிடுவதைப் பார்த்திருக்கிறோம். நாசருடனான கேள்வி நேரம் இவ்வாறு இருக்க வேண்டாம் என நாம் முடிவு செய்துகொள்வோம். ஒரு சிறந்த நடிப்பு அறிஞரிடமிருந்து கலையைப் பற்றிய கேள்விகளைக் கேட்டு, பேரவைக்கும், நாசருக்கும், அமெரிக்கத் தமிழர்களுக்கும் பெருமையைக் கூட்டுவோம்!

Wednesday, April 8, 2009

பேரவை விழா மலருக்கு உங்கள் படைப்புகள் தேவை!

குவலயத் தமிழன்பர்களுக்கு வணக்கம்!

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் ஆண்டு விழா இவ்வாண்டு ஜூலை 3, 4, 5 ஆகிய தேதிகளில் ஜார்ஜியா மாநிலம் அட்லாண்டா நகரில் எழுச்சியுடன் கொண்டாடப்படவுள்ளது. இதன்போது கலந்துகொள்ளும் விருந்தினர்களையும் பற்றிய தகவல்களையும், ஏனைய நிகழ்ச்சிகளின் விபரங்களையும் எமது இணையத் தளத்தில் காணுங்கள்.

இவ்வாண்டு விழாவின்போது வெளிவரும் பேரவை மலருக்காக உங்களது படைப்புகளை அனுப்பக் கோருகிறோம். படைப்புகளை அனுப்பக் கடைசித் தேதி ஏப்ரல் 25, 2009. படைப்பு விதிமுறைகளைக் கீழ்க்கண்ட கோப்புகளில் பார்க்கவும். விரைந்து உங்களது ஆக்கங்களை அனுப்பி விழா மலரைச் சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.