Sunday, June 10, 2012

பேரவையும், தமிழ்மாநாடுகளும்


இருபத்தைந்து முப்பது வருடங்களுக்கு முன் அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த நகரங்களிலோ அல்லது மாநிலங்களிலோ தமிழ்ச் சங்கங்களைத் தோற்றுவித்தார்கள். உதாரணமாக நியூயார்க், வாசிங்டன், நியூ ஜெர்ஸி, பிலடெல்பியா, சிகாகோ, சான்பிரான்சிஸ்கோ போன்ற நகரங்களில் தமிழ்ச் சங்கங்கள் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக நடந்து வருகின்றன. ஆரம்ப காலங்களில் தமிழ்ச்சங்கங்கள் தமிழர்கள் ஒன்று கூடிக் களிக்கும் அமைப்புகளாக இருந்தாலும், காலப் போக்கில் கலை நிகழ்ச்சிகளையும், தமிழ்ப் பள்ளிகளையும், போட்டிகளையும், சிறப்பு உரைகளையும், அச்சிதழ்களையும் நடத்த ஆரம்பித்தனர். நியூயார்க், வாசிங்டன், டெலவர், ஹேரிஸ்பர்க், நியூஜெர்சி (இலங்கைத் தமிழ்ச் சங்கம்) என்ற பெருநகரங்களில் இருந்த தமிழ்ச் சங்கங்கள் பின்னால் ஒன்று கூடி வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) என்ற கூட்டமைப்பையும் ஏற்படுத்தி ஆண்டுக்கு ஒருமுறை கோடை விடுமுறையில் தமிழர் விழாக்களை ஒருங்கிணைத்தனர். முதலில் நானூறு அல்லது ஐநூறு பேர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டுக்கு கடந்த சில ஆண்டுகளாக சுமார் ஆயிரத்து ஐநூறு பேர்கள் வரை வருகின்றனர். அமெரிக்காவில் அதிகம் தமிழர்கள் கூடும் ஒரே நிகழ்வு இந்த பேரவை அல்லது பெட்னா மாநாடு.


இந்த மாநாட்டை ஒவ்வொரு ஆண்டும் ஒருங்கிணைக்கும் ஆர்வலர்கள் மேற்கொள்ளும் சிரமங்கள் எளிதில் விவரிக்க முடியாதவை. ஆயிரத்துக்கும் மேலானவர்கள் கலந்து கொள்ளும் ஒரு பெரிய மாநாட்டை எந்த ஊதியமும் பெறாத தன்னார்வலர்கள் மட்டுமே ஒருங்கிணைப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல. ஒரு சில சுயதொழிலதிபர்களைத் தவிர இத்தன்னார்வலர்களில் பெரும்பாலோர் முழு நேர வேலையில் இருப்பவர்கள். அமெரிக்காவில் அலுவலக நேரத்தில் நம்முடைய அலுவலக வேலையை அதிகம் தட்டிக் கழிக்க முடியாது. முழுநேர வேலையிலிருக்கும் கணவன் மனைவி இருவருமே அனைத்து வீட்டு வேலைகளையும், குழந்தைகளைக் கவனிப்பதையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதற்கிடையே மாநாட்டை ஆகும் செலவுகளுக்காக தங்கள் சொந்தப் பணத்தை நன்கொடையாக வேறு அளிக்க வேண்டும். மாநாட்டுக்கான கட்டணச்சீட்டு வருவாயை வைத்து மாநாட்டுச் செலவில் மூன்றில் ஒரு பங்கைக் கூட ஈடு செய்ய முடியாது. அரங்கத்தை அலங்கரிப்பதில் இருந்து, உணவு பரிமாறுவது, சுத்தம் செய்வது, இந்தியாவிலிருந்து வந்திருக்கும் விருந்தினர்களை விமான நிலையத்துக்குச் சென்று காரில் அழைத்து வருவது வரை அனைத்து வேலைகளையும் என்ன படித்திருந்தாலும், எந்த பதவியிலிருந்தாலும் நாமே செய்ய வேண்டும். எனவே அமெரிக்க மண்ணில் இவ்வளவு பெரிய மாநாட்டை ஏற்பாடு செய்வது என்பது அவ்வளவு எளிதல்ல. மாநாட்டில் எவ்வளவு குறைபாடுகள் இருந்தாலும், அதன் உள்ளடக்கத்தில் சில கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் மாநாட்டுக்காக ஒருங்கிணைப்பாளர்கள் ஆற்றி வரும் தொண்டை நெஞ்சாரப் பாராட்ட வேண்டும்.

பேரவை கடந்த காலத்தில் ஆற்றியுள்ள தொண்டு
  • பேரவையின் மாநாடுகளில் ஒரு பக்கம் வெகுமக்களின் திரைப்பட விருப்பத்தை அடிப்படையிலான நிகழ்ச்சிகள் சிறிதளவு இருந்தாலும், இன்னொரு பக்கத்தில் பாரம்பரியக் கலைகளையும், கிராமியக் கலைகளையும் ஒருங்கிணைப்பாளர்கள் துணிச்சலுடன் ஏற்பாடு செய்து வந்திருக்கின்றனர்.
  • அந்த அடிப்படையில் கடந்த பல ஆண்டுகளாக பேரவை இதைச் செய்து வந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் குழு, கே. ஏ. குணசேகரன் குழு, புஷ்பவனம் குப்புசாமி குழு, “நிஜ நாடக இயக்கம்” புகழ் மு. இராமசாமி குழுவினரின் "நந்தன் கதை", புதுச்சேரி ஆறுமுகம் குழுவினரின் “மதுரைவீரன் தெருக்கூத்து”, திண்டுக்கல் சக்தி தப்பாட்டக் குழு போன்ற தமிழர்களின் பாரம்பரிய கலைக் குழுக்களைத் தொடர்ந்து அழைத்து வந்து மாபெரும் வரவேற்புடன் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறது.
  • அது மட்டுமல்லாமல் விளிம்புநிலை மட்டும் ஒடுக்கப் பட்ட இனத்தவர்களின் சிக்கல்களைச் சித்தரிக்கும் கலைஞர்களை அமெரிக்க மண்ணுக்கு அழைத்து அவர்களை கௌரவித்து அனைத்துத்தரப்பு தமிழர்களும் நம் பண்டைய சமூகச் சீர்கேடுகளைக் களைந்து ஒன்றுபட்டு முன்னேற வேண்டும் என்று செயலில் காட்டி வருகிறது பேரவை. எடுத்துக்காட்டாக முன்பு அழைக்கப் பட்ட திருநங்கை நர்த்தகி நடராஜன், தலித்து எழுத்தாளர் சிவகாமி, நாட்டுப்புற இசைக்கலைஞர் மற்றும் ஆராய்ச்சியாளர் கே.ஏ.குணசேகரன், திண்டுக்கல் சக்தி தலித்து மகளிர்குழு போன்ற சிறப்பு விருந்தினர்களைக் கூறிப்பிடலாம். அமெரிக்க மண்ணில் உள்ள வேறு எந்த இந்திய இன அமைப்பும் செய்யாத சாதனையாகவும் இதைக் கூறலாம்.
  • நல்ல இலக்கியவாதிகளையும் எழுத்தாளர்களையும், கவிஞர்களையும், தமிழ் ஆராய்ச்சியாளர்களையும் அழைத்து கௌரவித்துள்ளது பேரவை. ஜெயகாந்தன், பிரபஞ்சன், சிவகாமி, சுஜாதா, சிவசங்கரி, கவிஞர்கள் அறிவுமதி, இன்குலாப், வைரமுத்து, மு.மேத்தா, அப்துல் இரகுமான், சிற்பி பாலசுப்பிரமணியம், தமிழன்பன், சேரன், கனிமொழி, ஜெயபாஸ்கரன், தாமரை, நா.முத்துக்குமார், தமிழாராய்ச்சியாளர்கள் கா. சிவத்தம்பி, பழனியப்பன், தமிழறிஞர்கள் தமிழண்ணல், சிலம்பொலி செல்லப்பன், மதிவாணன், ஓவியர் புகழேந்தி, அருள்மொழி, திரைப்பட இயக்குநர்கள் பாரதிராசா, சீமான், தங்கர் பச்சான், சொற்பொழிவாளர்கள் வைக்கோ, தியாகு, பர்வீன் சுல்தானா என எத்தனையோ பெயர்களைக் குறிப்பிடலாம்.
  • பேரவை இலங்கையில் ஐம்பது ஆண்டுகளாக தங்கள் அடிப்படை உரிமைகளுக்காக போராடி வரும் ஈழத்தமிழர்களின் துயரத்தில் பங்கு கொண்டு வந்திருக்கிறது பேரவை. ஈழத்துத் தலைவர்களையும், நாடாளுமன்றப் பிரதிநிதிகளையும், எழுத்தாளர்களையும், மலையகத்தமிழர்களின் பிரதிநிதிகளையும் வரவழைத்து அவர்களது குரலைத் தொடர்ந்து ஒலிக்கச் செய்திருக்கிறது. ஜனநாயக முறையில் அளித்து வரும் இந்த ஆதரவை வேண்டுமென்றே திரித்து பேரவை அமைப்பையே களங்கப்படுத்துவோரும் உண்டு. இருப்பினும் ஈழத்தமிழரின் உரிமைகளுக்காக எழுப்பப்படும் ஒவ்வொரு ஆதரவுக் குரலின் போதும் மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைவரும் கைதட்டியும், எழுந்து நின்று மரியாதை செலுத்தியும் தங்கள் ஒருமனதான வரவேற்பைத் தெரிவித்து வந்துள்ளனர்.
  • அமெரிக்க பல்கலைக்கழகங்களில் தமிழாராய்ச்சி செய்த/செய்யும் பேராசிரியர் இராமனுஜம், ஜார்ஜ் ஹார்ட், நார்மன் கட்லர், ஜேம்ஸ் லிண்ட்ஹோம் என பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியிருக்கின்றனர். அமெரிக்க மண்ணில் பிறந்து வளர்ந்த தமிழ் இளைஞர்கள் பலர் இம்முயற்சிகளுக்கு உதவியுள்ளனர்.
  • மாட்சிமை விருது என்ற பெயரில் ஆண்டுதோறும் தமிழுக்கும், தமிழ்ச் சமூகத்துக்கும் பெரிதளவில் தொண்டு ஆற்றியவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறது பேரவை. இவ்விருதினைப் பெற்றவர்களுள் முனைவர்கள் ஏ.கே.இராமானுஜம், வ.ஐ.சுப்பிரமணியம், மணவை முஸ்தபா, கா.சிவத்தம்பி, தமிழிசை ஆராய்ச்சியாளர்கள், வீ. பா. க. சுந்தரம், ந. மம்மது போன்றவர்கள் மிக முக்கியமானவர்கள்.
  • அமெரிக்க மண்ணில் நிரந்தரமாகத் தமிழாராய்ச்சியில் ஈடுபடுவதற்காக பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பீடம் ஏற்படுத்த பணம் திரட்டி உதவியது.
  • 2005ல் முதல்முறையாக அமெரிக்க மண்ணில் பன்னாட்டுத் திருக்குறள் மாநாட்டை நடத்தியது. மேரிலாந்து மாநிலம் கொலம்பியாவில் நடந்த இந்த மாநாட்டில், திருக்குறளில் ஆராய்ச்சி செய்து வரும் அறிஞர்கள் பலர் கலந்து கொண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளை வழங்கினர். இக்கட்டுரைகள் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தினரால் நடத்தப்படும் ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டன.
  • 2003ல் முதல்முறையாக அமெரிக்க மண்ணில் தமிழ் மொழி கற்பிக்கும் கோடைகால முகாம் நடத்தப் பட்டது. மேரிலாந்து மாநிலம் கொலம்பியாவில் நடந்த இம்முகாமில் அமெரிக்கா, கனடா நாடுகளிலிருந்து மொத்தம் 22 மாணவர்கள் கலந்து கொண்டு தமிழ் கற்றனர். இதைத் தொடர்ந்து மேலும் இரண்டு முகாம்கள் வெவ்வேறு நகரங்களில் நடத்தப் பட்டுள்ளன.
  • அமெரிக்கத் தமிழ் இளைஞர் அமைப்பான NTYO இங்கு பிறந்து வளர்ந்த தமிழ்ப் பிள்ளைகளால் ஆரம்பிக்கப் பட்டது. இவர்களும் பேரவை மாநாட்டில் தனியே தங்களுக்கென்று சில நல்ல நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்கின்றனர். இவை பெரும்பாலும் ஆங்கிலமும் தமிழும் கலந்து நடத்தப் பட்டாலும், தமிழ்ப் பண்பாட்டுக்குத் தொடர்பான நிகழ்ச்சிகளே.
  • 2006ல் இரண்டு இந்து மதவாத அமைப்புகள் கலிபோர்னியா மாநில பள்ளிக்கூட வரலாற்றுப் பாட நூல்களில் இந்திய வரலாற்றை திரித்து தவறான முறையில் திணிக்க முனைந்தது. பேரவை சில அமெரிக்க வரலாற்றுப் பேராசிரியர்களுடனும் மற்ற மதசார்பற்ற இந்திய அமைப்புகளுடனும் சேர்ந்து போராடி அந்த வரலாற்றுத் திரிப்பை முறியடித்தது.
  • கணினித் தமிழின் வளர்ச்சிக்கு பேரவை அமைப்பு ரீதியாக தன்னால் இயன்ற ஆதரவை அளித்து வருகிறது. தமிழ் யுனிகோடு வரிசையில் உள்ள சிக்கல்களை சரிசெய்ய உலக யுனிகோடு நிறுவனத்துக்குப் பரிந்துரைக்க தமிழக அரசு தொழில்நுட்ப வல்லுனர்கள் அடங்கிய ஒரு குழுவை ஏற்படுத்தியுள்ளது. பேரவை நிர்வாகக் குழுவும் தமிழக அரசின் பரிந்துரைகளை ஆதரித்து உலக யுனிகோடு நிறுவனத்துக்கு தன் கருத்துக்களை அனுப்பியுள்ளது.
  • ஆழிப்பேரலைகள் (சுனாமி) ஏற்படுத்திய மிகப் பெரும் சேதத்தின் போது தமிழ் நாட்டுக்கும், தமிழ் ஈழத்துக்கும் பொருளுதவியும், பண உதவியும் அளித்தது பேரவை. அதுமட்டுமல்லாமல் கும்பகோணத்தில் நடந்த பள்ளி தீ விபத்தின் போது உடனடியாக நிதி திரட்டி வழங்கியது. கட்ரீனா புயல் தாக்கிய அமெரிக்க நகரமான நியூஆர்லியன்ஸுக்கும் பேரவை உதவிகளை அனுப்பியது. ஆண்டு தோறும் பொங்கல் அன்று சிகாகோ நகரில் முதியோர் மற்றும் அனாதை இல்லங்களில் உணவு வழங்கி வருகிறது. இது போல் எண்ணற்ற சேவைகளில் பேரவைவும், அதன் அங்கங்களான பல தமிழ்ச் சங்கங்களும் செய்து வருகின்றன.
  • இதுதவிர கடந்த பல ஆண்டுகளாக திருமணத்துக்கான இளைஞர்கள் சந்திப்பையும் ஏற்படுத்தி வருகின்றனர். இவை சாதியை மறுத்த திருமணங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

5 comments:

மயிலாடுதுறை சிவா said...

பேரவையில் முதன் முதலில் 2000 கலந்துக் கொண்டேன்...அங்கு தலித் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமியை சந்திதேன்....மகிழ்ச்சி...அந்த நட்பு இன்னமும் தொடருகிறது....பேரவை சமூக ஆர்வலர்களை தொடர்ந்து அழைப்பது பேரவைக்கு நன்றி....

மயிலாடுதுறை சிவா.....

Yaathoramani.blogspot.com said...

பேரவையின் சாதனைகள் பிரமிப்பூட்டுகின்றன
சாதனைகள் தொடர எங்கள்
உள்ளம் கனிந்த நல் வாழ்த்துக்கள்

Unknown said...

பேரவையின் வரலாற்றைத் தொகுத்து அளித்ததற்கு நன்றி.

Unknown said...

பேரவையின் வரலாற்றைத் தொகுத்து அளித்ததற்கு நன்றி.

Avargal Unmaigal said...

15 ஆண்டுகளுக்கு மேல் அமெரிக்காவில் வசித்தாலும் இந்த அமைப்பை பற்றி இந்த ஆண்டுதான் முழுவிபரமாக தெரிந்து கொண்டேன், ஒவ்வொரு மாநிலத்திலும் தமிழ்சங்கம் இருப்பதை கேள்விபட்டுள்ளேன் ஆனால் அதில் கலந்து கொண்டதில்லை. எனக்கு கூட்டம் என்றால்லே அலர்ஜி ஆனால் இந்த பதிவை படித்தது கலந்து கொள்ளும் ஆசை வருகிறது. நேரம் கிடைத்தால் கலந்து கொள்கிறேன் நன்றி