Wednesday, June 13, 2012

பேரவை வெள்ளி விழாவில், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளரான திரு. எஸ்.ராமகிருஷ்ணன் இலக்கியம், சினிமா, நாடகம், சிற்றிதழ்கள், வார இதழ்கள், அயலக இதழ்கள், இணையம் எனப் பல தளங்கள் மூலம் இலக்கிய வாசகர்களிடம் நன்கு அறிமுகமானவர்.

'அட்சரம்' என்னும் இலக்கிய இதழை நடத்தி வரும் இவர், நவீன தமிழ்ச் சிறுகதையில் புதிய போக்குகளை உருவாக்கி படிப்பவர் கவனத்தை ஈர்த்தவர். ஆனந்த விகடனில் இவர் எழுதிய 'துணையெழுத்து' பரந்த அளவில் வாசகர்களின் கவனத்தை ஈர்த்தது. மகாபாரதத்தை மையமாகக் கொண்ட இவரின் 'உப பாண்டவம்' என்ற புதினம், தற்போது மலையாளம் மற்றும் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது 'நெடுங்குருதி' எனும் புதினம் 2003இல் தமிழின் சிறந்த புதினமாக தேர்வு செய்யப்பட்டது. திரு. எஸ்.ராமகிருஷ்ணன் தொகுத்து வெளியாகியுள்ள 'உலக சினிமா' என்ற நூல் உலக சினிமாவை தமிழில் அறிமுகப் படுத்தும் அரிய முயற்சி. குழந்தைகளுக்கான 'ஆலிஸின் அற்புத உலகம்' என்ற உலகப் புகழ் பெற்ற புதினத்தை மொழிபெயர்த்துள்ளார். உலக இலக்கியம் குறித்து ' வாக்கியங்களின் சாலை' என்ற கட்டுரைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.

காலத்தால் புறக்கணிக்கப்பட்டு சாம்பல் படிந்து நிற்கும் கிராமங்களையும் , நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்தவர்களாகத் தனிமையும் துயரமுமாக அலைவுறும் விளிம்பு நிலை மனிதர்களையும் திரு. எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் படைப்புகள் எங்கும் காணமுடிகிறது. கதை சொல்லலில் பல புதிய சாத்தியங்களை உருவாக்கும் இவரது மிகுபுனைவும் , கவித்துவ மொழியும் தமிழ்க் கதையாடலில் மிகத் தனித்துவமானது. இவரின் படைப்புகள் புதியதொரு தமிழ்ப் புனைவியலை உருவாகுகின்றன என்பதே உண்மை.

தனது எழுத்துகள் பற்றி திரு. எஸ். ரா அவர்கள் கூறுகையில்" என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும் வெல்வதும் பற்றிய கவலையின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு. எறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் வெல்லக்கட்டியைப் போல வெறியோடும் பேராசையோடும் உலகை எனது இருப்பிடத்துக்குள் இழுத்துக் கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துகள்" தமிழ் இலக்கிய உலகில் மிகவும் கொண்டாடப்படும் எழுத்தாளர் திரு. எஸ்.ரா அவர்களைக் கண்டு உரையாடவும், அவர்தம் சொற்பொழிவைக் கேட்டுப் பயனுறவும் நமது வெள்ளிவிழா ஒரு நல்ல வாய்ப்பைத் தருகிறது..

Register early before it gets full. It happened in FeTNA 2009!

No comments: