Wednesday, June 13, 2012

FeTNA வெள்ளி விழா: கவனகக்கலை நிகழ்ச்சியும் பயிலரங்கமும்!!

தமிழ் மக்களின் பழங்கலைகளில் கவனகக் கலையும் ஒன்று. கவனகம் என்பது ஒரே நேரத்தில் தன்னைச்சுற்றி நடக்கக் கூடிய பல்வேறு நிகழ்வுகளை நினைவில் நிறுத்தி முடிவில் தொகுத்துக் கூறுவதாகும். இது நினைவாற்றலின் உயர்ந்த வடிவம்.

நமது முன்னோர்கள் நூறு நிகழ்வுகள்வரை நினைவில் நிறுத்திச் சொல்லக்கூடிய ஆற்றல் பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் அரசர்களை மகிழ்விக்கவும், செல்வந்தர்கள் மத்தியிலும் இருந்து இந்தக் கவனகக் கலையைச் செய்திருக்கின்றார்கள். அவர்களுள் முக்கியமானவர்கள்.

செய்கு தம்பிப் பாவலர் சிறிய சரவணக்கவிராயர் தே.போ. கிருட்டிணசாமி பாவலர் நா.கதிர்வேல் பிள்ளை அட்டாவதானியார் அச்சுத உபாத்தியாயர் அரங்கநாதக்கவிராயர் அப்துல்காதர் அரங்கசாமி அய்யங்கார் சரவணக் கவிராயர்.

அரண்மனைகளிலும் அடுக்குமாடிச் செல்வந்தர்கள் வீடுகளிலும் மட்டுமே காண முடிந்த கவனகக்கலையைத் தமிழகத்தில் பட்டி தொட்டிகளுக்கெல்லாம் கொண்டு சென்ற பெருமை பதின்கவனகர் கோவில்பட்டி இராமையா அவர்களையே சாரும். அவர் கண்பார்வை இல்லாதவர். பத்து வகையான கவனகக்கலை நிகழ்ச்சி நடத்துவதில் வல்லவர். அவர் இன்று உயிருடன் இல்லை.

அவருக்குப்பின் கவனகக்கலையைத் தமிழகம் மட்டுமல்லாது கடல் கடந்து உலகம் முழுவதும் கொண்டு சென்ற பெருமை பதின்கவனகர் (தசாவதானி) இராமையா அவர்களுடைய புதல்வர் பதினாறுகவனகர் திருக்குறள் கனகசுப்புரெத்தினம் அவர்களையே சாரும். அவரை இன்றைய கவனகக் கலையின் தந்தை என்று சொல்லலாம்.

அடுத்த கவனகர் செங்கல்பட்டு திருக்குறள் இரா.எல்லப்பன் அவர்கள். இவர் திருக்குறளில் மட்டும் முப்பதிற்கும் மேற்பட்ட கவனகங்களைச் செய்யக் கூடியவர்.

எண் கவனகம், எழுத்து கவனகம், வண்ண கவனகம், பெயர் கவனகம், கூட்டல் கவனகம், கழித்தல் கவனகம், பெருக்கல் கவனகம், தொடுதல் கவனகம், மணியடித்தல் கவனகம், ஈற்றடிக்கு வெண்பா எழுதுதல், சிலேடை வெண்பா எழுதுதல், கட்டளைக் கலித்துறை எழுதுதல், சூழ்நிலைக்கேற்ப இசைப்பாடல் எழுதுதல், மாயக் கட்டம், பிறந்த நாளுக்குக் கிழமை கூறல், கனமூலம் கூறல், இருமடி கூறல், நாலடியார், திருக்குறள் கூறல், கழித்தல் கவனகம், கனமூலம் கூறல், சோப்பில் சிற்பம் செதுக்குதல், சூழ்நிலைக்குப் பாடல் எழுதுதல் எனப் பலவகையான கவனகங்கள் உள்ளன.

இக்கவனக் கலையில் இன்றைய காலகட்டத்தில், எழுபது கவனகங்களை நடத்தும் ஆற்றல் கொண்ட மற்றுமொரு வல்லவர்தான் கலை.செழியன் அவர்கள் ஆவார். அமெரிக்கத் தமிழர்களுக்கும், தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கும் இவ்வரிய கலையைக் கற்பிக்க வருகிறார் கலை.செழியன் அவர்கள். கலை செழியன் ஓர் இளம் தமிழறிஞர். இவர் ’செந்தமிழ் அந்தணர்’ இளங்குமரனார் அய்யா அவர்களின் வழிகாட்டுதலில் ’தமிழியலில் கவனகக்கலை’ என்கிற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

28 வயது இளைஞரான இவர் ஓர் ’எழுபது கவனகர்’. பல செயல்களை நினைவில் வைத்து செயல்படும் கலைதான் கவனகக்கலை. திரு. செழியன் 13 வயதிலிருந்தே கவனகக்கலை செய்து வருகிறார். இவர் ’நினைவாற்றலில் மனப்புரட்சி’ என்கிற நூல் ஒன்றை எழுதியுள்ளார். அய்யா இளங்குமரனார் முன்னிலையில் இவர் எழுபதின் கவனகம் அரங்கேற்றம் செய்தது இவரது வாழ்வில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

இதுவரை இவர் 1500 மேடைகளில் கவனகக் கலையை நிகழ்த்தியிருக்கிறார். இச்சிறுவயதிலியே இவர் பல விருதுகளும் சிறப்புகளும் பெற்றுள்ளார். இவர் எழுதிய நினைவாற்றலில் மனப்புரட்சி என்கிற நூலிற்காக தமிழக அரசின், ஆண்டு 2000-த்துக்கான “தமிழிலக்கியச் சங்கப்பலகைக் குறள்பீடப் பரிசு” பரிசு பெற்றார். இவரது பேச்சுத் திறமைக்காக 2010-ம் ஆண்டு சென்னைக் கம்பன் கழகம் ’ வளர் தலைமுறை பேச்சாளர் விருது’ வழங்கி சிறப்புச் செய்திருக்கிறது.

பேரவை வெள்ளி விழாவில் இவரது கவனகக்கலை ஆற்றலைக் காணவும், நம் அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கான கவனகக்கலை பயிற்சியை மேற்கொள்ளவும் நாம் அனைவரும் வெள்ளி விழாவில் கலந்து கொள்வது ஒரு நல்வாய்ப்பாக இருக்கிறது என்பது திண்ணம்.

Register early before it gets full. It happened in FeTNA 2009!

No comments: